மக்களின் எதிர்ப்புகளை மீறி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டண உயர்வை அறிவித்து இருப்பதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் இன்று முதல் மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. இது ஏழை , எளிய மக்கள் மீது அரசிற்கு அக்கரையில்லை என்பதை காட்டுகிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு , அதில் இருந்து மக்கள் தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல தேறிவருகிறார்கள். இந்நிலையில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. அதில் முற்கட்டமாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் கருத்து கேட்டது . அப்பொழுது, பொது மக்களும், தொழில் நிறுவனங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது நிறுவனங்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் சம்பிராதய சடங்காக எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அவற்றை பரிசீலனை செய்யாமல் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்து இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. மின்சார வாரியம் தங்களின் நஷ்ட கணக்கை நேர் செய்ய எத்தனையோ வழிகள் இருந்தும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு , ஏழை , எளிய மக்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்துவது எந்தவிதத்தில் நியாயம்?. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம், மாதம், மாதம் மின் நுகர்வு அளவிடு செய்ய வழிவகை செய்வோம் என்ற தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலில் இருந்தே மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது . கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக , மக்களின் ஆதரவை இழந்து வரும் அரசாக திகழ்கிறது. தமிழக அரசு , மக்களை நேரடியாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடடியாக கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.