அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபு வீட்டில் வருமான வரித் துறை மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக எம்ஜிஆர் அணியின் முக்கிய நிர்வாகியுமானவர் வடவள்ளி சந்திரசேகர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளரும், கேசிபி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். சந்திரசேகர் அதிமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மாநகராட்சி பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு பலகோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடுத்து அதன் மூலம் பல்வேறு பணிகளை செய்து கொடுத்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சோதனைகளில் இரண்டு முறை சோதனைகளுக்கு உள்ளானவர் வடவள்ளி சந்திரசேகர். இந்நிலையில், கடந்த வாரம் சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, சந்திரசேகர் அலுவலகம் மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் சோதனையை அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வந்தனர். அதேபோல, சந்திரசேகர் இயக்குநராகப் பங்கு வகித்த கேசிபி இன்ஜினியரிங் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். முக்கியமாக கேசிபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து, கோவை, மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் என்பவரது வீட்டில் அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். அதேபோல, கேசிபி நிறுவனம் மற்றும் சந்திரபிரகாஷ் வீடு ஆகிய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில், சந்திரசேகர் சகோதரர் செந்தில் பிரபு வீட்டில் வருமான வரித் துறை மீண்டும் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமாணவர்களிடம் தொடர்ந்து 6வது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா