புதுச்சேரியில் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்பு

புதுச்சேரியில் குழந்தைகளிடம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து பரவி வரும் நிலையில் பெரியவர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மத்தியில்…

புதுச்சேரியில் குழந்தைகளிடம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து பரவி வரும் நிலையில் பெரியவர்களுக்கும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரியவர்கள் 10 பேருக்கு இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 529 குழந்தைகள், சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பியுள்ளதாகவும், நேற்று மட்டும் 56 குழந்தைகள் புதிதாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஒட்டுமொத்தமாக 201 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள விடுமுறையை நீட்டிக்க சுகாதாரத்துறை பரிந்துரைக்காத காரணத்தால், திங்கட்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

– ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.