பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில், நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த விழா பிரமாண்டமாக நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த ஜூலை 1ம் தேதியன்று நடத்தப்பட்ட கலை பண்பாட்டுத்துறை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கிராமியக் கலைஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமான கலைவிழா நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற பேரவையில் கடந்த செப்.4ம் தேதியன்று 2021-2022 ஆம் ஆண்டு துறை மானியக் கோரிக்கை எண்.29-ல் தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பின்வருமாறு அறிவிப்பை வெளியிட்டார்.
“தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி, தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்கு பெறும் பிரம்மாண்ட கலைவிழா, பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன் ஆண்டுதோறும் சென்னையில் மூன்று நாட்கள் நடத்தப்படும்.
இதற்கென தொடரும் செலவினமாக கலை பண்பாட்டுத்துறையின் ஆண்டு வரவு செலவு ஒதுக்கீட்டிலிருந்து ரூ.91 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்”
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண். 166, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, வாயிலாக தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி தமிழகத்தினைச் சார்ந்த பாரம்பரியக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழா, ஆண்டு தோறும் சென்னையில் 6 இடங்களில் (இணைய வழி மூலமும்) 3 நாட்கள் நடத்துவதற்கு ரூ.91,00,000/- தொடரும் செலவினமாக அரசு அனுமதித்து ஆணை வெளியிட்டுள்ளது.
அரசாணையினை செயல்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” எனும் தலைப்பில் தமிழகத்தின் பாரம்பரியமான கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்டு, சென்னையில் 7 இடங்களில் 14.01.2022, 15.01.2022, 16.01.2022 ஆகிய மூன்று நாட்கள் கலை விழா நடைபெறவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 7 வெளி மாநில கிராமியக் கலைக்குழுவினர் இவ்விழாவில் பங்குகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“நம்ம ஊரு திருவிழாவை” சீரும், சிறப்புமாக நடத்வது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், கலை பண்பாட்டுத்துறை ஆணையர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் கலைமாமணி வாகை சந்திரசேகர் தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர், காவல்துறை துணை ஆணையர், போக்குவரத்துத்துறை துணை ஆணையர், நேரு விளையாட்டரங்கத்தின் முதுநிலை மேலாளர், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சரால் சென்னையில் நடத்தப்படுவதைப் போன்றே இவ்விழாவினை மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும், அரசு உயர் அலுவலர்களாலும், கலைஞர்களாலும் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை விரைந்து எடுத்திட மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.