திருவாரூரில் முறைகேடாக நிலம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில்
முன்னாள் கோட்டாட்சியர் உள்பட மூவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு திருவாரூர் அருகே அடியக்கமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக வேறு ஒருவருக்கு பட்டா மாற்றம் செய்து பல கோடி ரூபாய் ஆதாயமடைந்தாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக செந்தில் அளித்த புகாரில், அப்போதைய திருவாரூர் கோட்டாட்சியர் முத்து மீனாட்சி, அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
இந்த சோதனையானது இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முத்து
மீனாட்சி தற்போது கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதேபோல துர்கா ராணி விளமல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.







