கடுமையான வெயிலின் தாக்கதாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ள காட்டு யானை ஒன்று, குட்டை இருக்கிற பகுதிக்குச் சென்று, தண்ணீரில் மூழ்கி ஆனந்த குளியலிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, கேரள மாநிலத்தின் அம்பநாடு பகுதியில் ஏராளமான ரப்பர் மற்றும் தேயிலை எஸ்டேட் உள்ளதால், அவ்வப்போது இந்த பகுதிக்கு காட்டு யானைக் கூட்டங்கள் உலா வருவது வழக்கம்.
இந்த நிலையில், அம்பநாடு பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட் பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று, கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக அங்கும், இங்குமாய் நீரோடைகளைத் தேடி சுற்றி வந்துள்ளது. பின்னர் அப்பகுதியில் ஒரு குட்டையைப் பார்த்தவுடன், வேகமாக அந்த குட்டை இருக்கிற பகுதிக்குச் சென்று, அந்த காட்டு யானை தண்ணீர் குட்டையில் மூழ்கி குளித்தது. தண்ணீரில் மூழ்கி எழுந்து, புரண்டு உற்சாகமாக குளித்தது.
தண்ணீரை வாரி இறைத்தும், நீச்சலடித்தும் நீண்ட நேரமாக ஆனந்த குளியல் இட்டது. இதைப் பார்த்த ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். காட்டுயானை குட்டையில் மூழ்கி ஆனந்த குளியலிடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








