ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முடிவுகளை உடனுக்குடன் வெளியிடுவதோடு இணைய தளத்திலும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு, காலை 6.30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் சிசிடிவிக்கள், மேஜைகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உரிய அடையாள அட்டையின்றி எவரையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.







