வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆண் நண்பரை, எரித்துக் கொலை செய்ய முயன்ற பெண்!

புதுக்கோட்டை அருகே, தன்னை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆண் நண்பரை, எரித்துக் கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்.…

புதுக்கோட்டை அருகே, தன்னை விட்டுவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஆண் நண்பரை, எரித்துக் கொலை செய்ய முயன்ற இளம்பெண்ணால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர், அப்பகுதியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சதீஷுக்கும் அவரது உறவினர் பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற இருந்தது. இந்தநிலையில், திருமணத்திற்கு முதல் நாள் இரவு ராதா என்பவரது வீட்டில் இருந்து சதீஷ் உடலில் தீ பிடித்த நிலையில், அலறி கொண்டு வெளியே ஓடி வந்துள்ளார். அவரது அலரல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ராதா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, ராதாவை திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி, சதீஷ் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்த சூழலில்தான் சதீஷின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால், ராதாவுடன் பழகுவதை சதீஷ் தவிர்த்து வந்துள்ளார். இதில், கடும் கோபமடைந்த ராதா, அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல், திருமணத்திற்கு முதல் நாள் சதீஷை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, இரவு ராதா வீட்டிற்கு சென்ற சதீஷ் நள்ளிரவில் அயர்ந்து தூங்கியுள்ளார். அப்போது, அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து, ராதா அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் உடலெங்கும் தீ பற்றிய நிலையில் ராதாவின் வீட்டில் இருந்து சதீஷ் அலறித் துடித்தவாறு தெருவில் ஓடியுள்ளார். இதுகுறித்த சாட்சியங்களை கைப்பற்றிய போலீசார், ராதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை நடத்தினர். அப்போது சதீஷை கொலை செய்ய முயன்றதை ராதா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருமணம் ஆக இருந்த புதுமாப்பிள்ளை உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவது உறவினர்களிடம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.