“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தாய்ப்பால் வார விழா வாழ்த்துச் செய்தியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தை செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை…

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தாய்ப்பால் வார விழா வாழ்த்துச் செய்தியாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தை செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை சகோதரிகளே, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதைவிட, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உங்கள் நலனில் அக்கறை கொண்டவனாக, உங்களை பத்திரிகை செய்தியின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 1-8-2021 முதல் அடுத்த 7 தினங்கள் உலக தாய்ப்பால் வார விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

‘மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்’ என்பதனைக் கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை வகுத்து, செயல்படுத்தி, மக்கள் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குழந்தையின் முதல் 1000 நாட்கள், அதாவது தாயின் வயிற்றில், கரு உருவானது முதல், 2 வயது வரையிலான நாட்கள் அந்தக் குழந்தையின் ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என மருத்துவர்கள் தெரிவிப்பதால், இந்த முதல் 1000 நாட்களில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த வாரம், உலக தாய்ப்பால் வாரம், தாய்ப்பாலின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் இந்தத் தருணத்தில், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தவறாமல் தாய்ப்பால் அளிக்க வேண்டும், 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் என்றும், 6ம் மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் தொடர்ந்து கொடுங்கள் என்றும் கனிவோடு ஒரு சகோதரனாய் கேட்டுக் கொள்கிறேன். தாயும், சேயும் நலமுடன் வாழ இத்தருணத்தில் அன்போடு வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.