“எல்லோரும் நம்மை விரும்பினால் கடவுள் ஆகிவிடுவோம்” – நடிகர் சந்தானம் பேச்சு!

“எல்லோரும் நம்மை விரும்பினால் நாம் கடவுள் ஆகிவிடுவோம்,  என்னை பிடிக்காதவர்களும் சிலர் இருக்கின்றனர்” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.  ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம்,  ப்ரியா லயா,  தம்பி ராமையா,  பால சரவணன் ஆகியோர்…

“எல்லோரும் நம்மை விரும்பினால் நாம் கடவுள் ஆகிவிடுவோம்,  என்னை பிடிக்காதவர்களும் சிலர் இருக்கின்றனர்” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். 

ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம்,  ப்ரியா லயா,  தம்பி ராமையா,  பால சரவணன்
ஆகியோர் நடித்துள்ள படம் ‘இங்க நான்தான் கிங்கு’.  இப்படத்திற்கு இமான் இசை
அமைத்துள்ளார்.  மே 10-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு
நேற்று சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா,  “இன்றைக்கு சினிமாவை தமிழ்,  மலையாளம் என பிரித்து பார்க்கின்றனர்.‌  நம்முடைய கலையை தாழ்த்தி பேச வேண்டிய அவசியம் இல்லை.  காம நெடி இல்லாத காமெடி படம் ‘இங்கு நான்தான் கிங்கு’ படம்.  சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவரது அணுகுமுறை தான்.  நிஜ ஹீரோ அவர்.  பழைய நண்பர்களை பக்கத்தில் வைத்து சகித்து பழக்கக்கூடியவர்.  இமான் இசை நன்றாக வந்துள்ளது.  மைனா, கும்கி பட நினைவுகள் வருகின்றது எனக்கு.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி படம் செய்துள்ளேன்.  இந்த படம் யாரையும் ஏமாத்தாது.  குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தகுதியுடைய படம்” என்று கூறினார்.தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் பேசியதாவது;

“இந்த படத்தின் தயாரிப்பாளருடன் வெள்ளக்காரதுரை மற்றும் மருது படத்தில் இசை
அமைத்துள்ளேன்.  சந்தானத்துடன் படம் இசையமைக்க ரொம்ப நாள் ஆசை.  இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசம்.  மாயோனே பாடல் நல்ல பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் படத்தில் மெலோடி பாடல் இல்லை என நான் நினைத்ததுண்டு. இந்த படத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது” என்றார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் சந்தானம் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,

“இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் நடிக்க கதை இருந்தால் நடிப்பேன்.  நான் இந்த
அளவுக்கு வெற்றியுடன் வந்துள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல.  என் உடன்
இருந்த அனைத்து நடிகர்கள்,  தயாரிப்பாளர்கள்,  இயக்குநர்கள்தான் காரணம்.  ‘இங்கு நான்தான் கிங்கு’ ரஜினிகாந்த் பேசிய வசனம் . அது இப்படத்திற்கு பொருத்தமாக இருந்தது.
மற்றபடி அரசியல் காரணங்களுக்காக இல்லை.

நீங்கள் உங்கள் கூட நடித்தவர்களுக்கு உதவி செய்வதில்லை என்ற செய்தி பரவி
வருகிறது.  அதுபற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு,

“எல்லோரும் என்னை ரசித்தால் நான் கடவுளாக மாறிவிடுவேன்.  நம்மை பிடிக்காதவர்கள், தவறாக சொல்வார்கள்.  அதனை பெரிதுபடுத்த தேவையில்லை.  மரணம் என்பது நம் கையில் இல்லை.  எப்போது வரும் என்று தெரியாது.  இருக்கும் வரையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விஷயங்களா நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அனுஷ்காவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை என சொல்லியிருந்தேன். க தை அமையவில்லை. அமைந்தால் நடிக்கலாம்.

ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏன் என்ற கேள்விக்கு,  “ஒழுக்கத்திலும், செய்யும் வேலையில்  அர்ப்பணிப்புடன் இருக்கவும் ஒரு பேஸ் வேண்டும்.  அப்படி கலகலப்பாக இருப்பதற்கான அடித்தளம் ஆன்மிகத்தில் கிடைக்கிறது”  என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.