ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது.
ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரானது அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறும் என கூறப்பட்டு வந்த நிலையில், அக்டோபர் 5ம் தேதி உலகக் கோப்பை போட்டி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் ஐசிசி உலக கோப்பை ஆடவர் கிரிக்கெட் (50 ஓவர் ) தொடருக்கான போட்டிகள் இந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பெங்களூர், சென்னை, டெல்லி, தர்மசாலா, குவாஹாட்டி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட், மும்பை ஆகிய நகரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
மொத்தம் 46 நாட்கள் 48 போட்டிகள் நடத்தப்பட உள்ள நிலையில், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்னும் தெரிவிக்கவில்லை. பொதுவாக உலகக் கோப்பை போட்டிகான அட்டவணையை ஐசிசி ஒரு வருடத்திற்கு முன்பே வெளியிட்டுவிடும். ஆனால், இந்த முறை பிசிசிஐ மத்திய அரசின் அனுமதிகளுக்காக காத்திருப்பதால் இன்னும் போட்டி அட்டவணையை வெளியிடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா முதன்முறையாக உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அனைத்தையும் முழுக்க முழுக்க தனித்தே நடத்த முடிவு செய்துள்ளது . இதற்கு முன்பு இந்தியா, 1987, 1996 மற்றும் 2011- ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட உலகக் கோப்பைப் போட்டிகளை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் சேர்ந்து நடத்தியது . இப்போது தனித்து நடத்துவதால் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையை வெல்வது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 2011-க்கு பிறகு இந்தியா ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளை தனித்து நடத்துவது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா