தனக்கென்று தனித்தீவு ஒன்றை உருவாக்கி அதற்கு கைலாசா என்ற பெயர் வைத்து வாழ்ந்துவரும் சாமியார் நித்தியானந்தா, தற்போது சமாதி நிலையில் இருப்பதாகவும் அதிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சாமியார் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் மரணமடைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு நித்தியானந்தா மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசவாசிகள் உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். நான் மரணமடையவில்லை. மிக விரைவில் எனது உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்களை மேற்கொள்வேன். உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதாரணமான ஆற்றலை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இவரை பின்தொடரும் பக்தர்கள், இவரது பதிவுக்கு மகிழ்ச்சியான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். “உங்களால் இந்த உலகத்துக்கு இன்னும் பல நல்ல காரியங்கள் நடக்கவுள்ளன” என்று ஒரு பக்தர் கமெண்ட் செய்துள்ளார்.
“உங்கள் பதிவுக்கு நன்றி. தயவுசெய்து எனது மனதுடன் இணைந்து அற்புதம் நிகழ்த்துங்கள்” என்று மற்றொரு பக்தர் பேஸ்புக்கில் கமென்ட் செய்துள்ளார். “உங்கள் தரிசனத்துக்காக காத்திருக்கிறேன்” என்று பக்தர்கள் பலரும் கமென்ட் செய்திருக்கின்றனர்.
இதனிடையே, நித்தியானந்தா மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா திரும்ப உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்தியானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேர்வார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-மணிகண்டன்









