தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்துவேன்- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வகையில், அதன் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவேன் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த…

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வகையில், அதன் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்துவேன் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா இடம்பெறுவார் எனவும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் நியூஸ் 7 தமிழ் முதலில் செய்தி வெளியிட்டது.

அதன்படி புதிய அமைச்சராக டி.ஆர்.பி,ராஜா இன்று பதவியேற்றார். மேலும், அமைச்சரவையிலும் இன்று மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டு, அந்த பொறுப்பு ஏற்கனவே தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிடிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுளளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் (2021 – 2022), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (2022 – 2023, 2023 – 2024) சமர்ப்பித்துள்ளேன்.

முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.

நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலகாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.

கருணாநதி ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்த போதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிர்வகித்த மனோ தங்கராஜின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிர்வகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

இன்று நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.