ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தியின் மேல் தமிழக மக்கள் வைத்துள்ள ஆதரவிற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது.
ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதலமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.
முதலமைச்சர் இருக்கின்ற சட்டப்பேரவையில் நானும் அங்கமாகபோகிறேன் என்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் மூலம் இந்த ஊர் மக்களுக்கு நல்லதை செய்வேன். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்காக திமுக அமைச்சர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அதேபோல், கனிமொழி, உதயநிதி, கமல் ஆகியோரும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தனர். இந்த வெற்றியின் பெரும் பங்கு முதலமைச்சரையே சாரும்.
தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது. இது பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன் என அவர் கூறினார்.