விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். தம்பி விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன் என கரூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”அதிமுக அமைச்சர்கள் 6 பேர் மீது வழக்கு உள்ளது. இதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? தற்போது அமலாக்கத்துறை என்பது அமலாக்கத்துறையாகவே இல்லை. கொடநாடு ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது. தனி வழித்தடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக் கூடிய பகுதியாகும். அந்த இடத்தில் எப்படி மின்சாரம் தடைபட்டது? எப்படி கொலை நடந்தது?
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரர் கொடுத்த பேட்டி காலதாமதம் என்றாலும் அது வரவேற்கத்தக்கது. அவரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவருக்கு கொலை மிரட்டல் விட்டதாக அவர் தெரிவித்து இருக்கிறார். அவர் சொல்வதை வைத்து உடனடியாக துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் 14 பேர்களை சுட்டு கொலை செய்த சம்பவம் போல கொடநாடு கொலை சம்பவம் ஆகிவிடக்கூடாது.
திமுக, மத்திய அரசுடன் கடந்த 18 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது. அப்போது ஏன் நீட் தேர்வு மற்றும் கச்சத் தீவு தொடர்பாக நடவடிக்கை அப்போது ஏன் எடுக்கவில்லை. என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட பணியில் இல்லை. அவர்கள் தமிழ்நாட்டில் இடம் வாங்கிக் கொண்டு விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு ஏன் நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சனையில் தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளாக நடந்து கொள்கிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதற்காக ஸ்டாலின் ஓட்டு கேட்க வேண்டும். ஜெயலலிதாவாக இருந்திருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் தராதவர்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றி இருப்பார்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். விஜய் என்னுடன் கூட்டணி வைக்க விருப்பப்பட்டால் இணைந்து செயல்படுவேன். தமிழ்நாட்டின் பெருமையாக இருப்பவர் ரஜினிகாந்த். அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறு இல்லை. அது அவருடைய சொந்த விருப்பம்.”
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.







