‘விக்ரம்’ படத்தின் முதல் விமர்சகர் நான்தான்-உதயநிதி ஸ்டாலின்

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் முதல் விமர்சகர் நான்தான் என்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார்…

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் முதல் விமர்சகர் நான்தான் என்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல் ஹாசன், தயாரிப்பாளர் அன்புச் செழியன் ஆகியோர் பங்கேற்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் பங்கேற்றார்.

அனிருத் பேசுகையில், “விக்ரம் படத்தை பிரமாண்டமாக மாற்றிய மக்களுக்கு நன்றி. உங்களுக்கு என்ன கமல் பரிசு கொடுத்தார் என்று நிறைய பேர் கேட்டனர். விக்ரம் படமே எனக்கு பெரிய பரிசு வேறு எந்த பரிசும் தேவை இல்லை என்றேன்” என்றார்.

“கமல் பணத்திற்கு ஆசைப்பட்டது இல்லை, இருப்பின்னும் இந்த படம் வெற்றி தேவை என்று மிகவும் ஆசைப்பட்டார். இதற்காக கமல் மிகவும் உழைத்தார்” என்று தயரிப்பாளர் அன்பு செழியன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

புஷ்பா, கேஜிஎப் போன்ற மற்ற மொழி சார்ந்த படங்கள் ஓடி கொண்டு இருக்கும்போது, ஒரு தமிழ் படம் ஓடவில்லை என வருத்தத்தில் இருந்தேன். இப்படியான ஒரு சூழலில் ஒரு வெற்றி படமாக மாறியிருக்கிறது விக்ரம். இந்தப் படத்தை கமல் எனக்கு முதலில் காண்பித்தார்.

இடைவேளை முடிந்த பின்பு நான் ஆச்சரியமாக உணர்ந்தேன். என்னுடைய வாழ்த்தையும் தெரிவித்தேன். இந்த திரைப்படத்தின் முதல் விமர்சகர் நான் தான் என்பதில் பெருமையாக உள்ளது. படம் வெற்றி பெறும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை.

விக்ரம் திரைப்படத்தை 7 முறை பார்த்துவிட்டேன். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது, இந்த ரயிலில் கடைசியாக ஏறிய பயணி நான் என சொன்னேன் நான் ஏறியது ரயில் இல்லை; ராக்கெட். விக்ரம் படம் ஒரு ராக்கெட் என்று உதயநிதி பேசினார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.