தமது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில இயக்குநர் பாலா புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் 1999 சேது படத்தை இயக்கினார். நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட படங்கள் பாலாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த இயக்கத்துக்கான தேசிய விருதை பாலா பெற்றுள்ளார்.
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இயக்குநர் பாலா புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை.. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம். எனது பெயரில் மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக் கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியுள்ளார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் கேட்டுள்ளார். அந்த போலி கணக்கை முடக்க வேண்டும். அதில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குநர் பாலா அளித்த புகாரில் கூறியுள்ளார்.







