சென்னை அடுத்த பல்லாவரத்தில் கணவன் ரம்மி ஆடி பணத்தை இழந்ததால், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பம்மலைச் சேர்ந்த ஞானசெல்வன், நாகல்கோணியில் உள்ள தோல்பொருள் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான நிலையில், ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் வரை இழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஞானசெல்வனுக்கும் அவரது மனைவி வகிதா ப்ளோராவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தகராறு முற்றியதில், ஞானசெல்வன் இருந்த அறையை தாழிட்டுவிட்டு, மற்றொரு அறைக்குச் சென்ற வகிதா ப்ளோரா, மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். ஞானசெல்வன் பதற்றத்தில் கூச்சலிட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் வந்து வகிதாவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல, சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த சதீஷ்குமார், ஆன்லைன் ரம்மி மூலம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்ததாக கூறப்படும் நிலையில், குடும்பத்துடன் உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். கடன் தொல்லை அதிகரித்ததால், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள லாட்ஜில் தனது மனைவி மற்றும் குழந்தைக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்துவிட்டு சதீஷூம் தூக்க மாத்திரை போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார். இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்ட உறவினர்கள், மருத்துவமனையில் அனுமதித்தனர்.
-ம.பவித்ரா