சென்னையை அடுத்த மாங்காட்டில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கணவரை அடித்துக் கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாங்காடு அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(37), கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்கர் அவரது மனைவி உஷா(35), மற்றும் பிள்ளைகளை காணவில்லை என அவரது தாய் மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்த நிலையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கார் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஸ்கரின் மனைவி மற்றும் அவரது அண்ணன் பாக்யராஜ் ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மாங்காடு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் பாஸ்கரின் மனைவி உஷாவை கைது செய்தனர். இதையடுத்து நேற்று பாக்யராஜ்(39), அவரது நண்பர்கள் வெங்கடேசன்(40), கோகுல்(24), ஆகியோரை கைது செய்து விசாரணை செய்தபோது பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவி சந்தேகப்பட்டதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரம் அடைந்த உஷா வீட்டில் இருந்த இரும்பு பைப்பால் பாஸ்கரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கியதையடுத்து, உஷா அவரது அண்ணன் பாக்கியராஜ் வீட்டிற்க்கு வரவழைத்துள்ளார்.

அவர் தனது நண்பர்களுடன் வந்தவர் பாஸ்கரை சரமாரியாக தாக்கி கொலை செய்து விட்டு பாஸ்கர் உடலை காரில் எடுத்துச் சென்று கொலையை மறைக்க ரத்தக்கரை படிந்த பெட்சீட், தலையனை ஆகியவற்றை அருகில் உள்ள குட்டையில் வீசி விட்டு பாஸ்கரின் உடலை கல்குவாரியில் வீசிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. கணவன் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியே கணவனை கொலை சம்பவத்தில் மனைவி மற்றும் மனைவியின் அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







