குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ம் தேதியோடு முடிவடைய உள்ளதை முன்னிட்டு, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், குடியரசு துணைத் தலைவரின் முக்கியத்துவம், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் தகுதி, இந்த தேர்தலின் வாக்காளர்கள் யார் யார், இந்த தேர்தல் எவ்வாறு நடக்கும் என்பது குறித்தெல்லாம் தற்போது பார்ப்போம்.
குடியரசு துணைத் தலைவரின் முக்கியத்துவம்:
இந்திய அரசியல் சாசனத்தில் குடியரசுத் தலைவருக்கு அடுத்த இடம், குடியரசு துணைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் இந்திய அரசின் முதல் தலைவர் என்றால், குடியரசு துணைத் தலைவர் இந்திய அரசின் இரண்டாவது தலைவர். அதோடு, குடியரசு துணைத் தலைவர்தான் மாநிலங்களவையை வழிநடத்தும் தலைவர்.
வேட்பாளர் தகுதி:
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பவர் முதலில் இந்தியராகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவராகவும் இருக்க வேண்டும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பவரை 20 எம்பிக்கள் முன்மொழியவும், 20 எம்பிக்கள் வழிமொழியவும் வேண்டும். போட்டி இடுபவரோ அல்லது அவரது சார்பில் மற்றவர்களோ 4 வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். போட்டியாளர் வைப்புத் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.
யார் வாக்காளர்கள்:
குடியரசு துணைத் தலைவரை தேர்தெடுப்பவர்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்கள். இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான், தேர்தலில் வாக்களித்து குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கிறார்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே உண்டு. மக்களவை உறுப்பினர்களாக இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மதிப்பு வாக்கு கொண்டதாக அந்த வாக்கு இருக்கும்.
தேர்தல் அட்டவணை:
2022ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் ஜூலை 5ம் தேதி வெளியிடப்படும். தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 19. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஜூலை 20ம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 22. போட்டி உறுதி எனில், ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அன்றைய தினமே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.