ஆசியாவிலிருந்து முதல் முறையாக உலகின் மூன்றாவது பெரிய பணக்காரராக இடம்பிடித்த கவுதம் அதானி.
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரும், அதானி குழுமங்களின் தலைவருமான கவுதம் அதானி உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் இதுவரை நான்காம் இடத்தில் இருந்தார். தற்போது மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை மூன்றாம் இடத்திலிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த , பெர்னார்ட் அர்னால்ட் நான்காம் இடம் பிடித்துள்ளார். ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை. மேலும் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றுள்ளார் அதானி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
துறைமுகங்கள், தளவாடங்கள், சுரங்கம், எரிவாயு,மின் உற்பத்தி, நிலக்கரி, ஹைட்ரஜன் ,பசுமை மின் ஆற்றல்,தரவு மையம் , பெட்ரோலிய பொருட்கள், சிறப்பு பொருளாதார மண்டலம்,உணவு பொருட்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு துறைகளில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி முதலிடத்தைப் பிடித்தார். அதே போன்று உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் மைக்ரோ சாப்டின பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு வந்தார். அப்போது 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.
தற்போது பிரபல ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்திய பணக்காரரான கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர் ,இந்திய மதிப்பில் ரூபாய் 10.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் , எலான் மஸ்க் 20 லட்சம் கோடிரூபாய் மதிப்புடன் முதலிடத்திலும் , அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் பனிரண்டரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 2-வது இடத்திலும் அதானி குழுமத்தின் கவுதம் அதானி 10 புள்ளி 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் பத்தரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் 4-வது இடத்திலும்,மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன், 5-வது இடத்தில் உள்ளனர். இதுவரை பத்தாம் இடத்திலிருந்த, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஏழு.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் , 11-வது இடத்திற்கு சென்றுள்ளார்.
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் பட்டியலில் ,இடம் பிடித்தாலும் கவுதம் அதானியும், அதானி குழுமமும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டது. கடந்த வாரம் தர மதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் ரேட்டிங்க்கின் துணை நிறுவனமான கிரெடிட் ரேட்டிங் அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து. அதானியின் சமீப கால செயல்பாடுகளின் படி, புது வணிகங்களில் அதானிக்கு எதிர்பார்த்த வருவாய் வருவது தாமதமானால் அதானி கடன் பொறியில் சிக்கும் எனவும் எச்சரித்திருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி, உலக அளவில் மூன்றாம் பெரிய பணக்காரராக மாறியுள்ளது பங்குதாரர்களுக்கு நம்பிக்கையான செய்தியாகவே உள்ளது.
ரா.தங்கபாண்டியன்