“அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள்?” – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நதின் சூர்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், “கரூர் மாவட்டம் திருமணிலையூர் மற்றும் லைட் ஹவுஸ் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் கரூர் உடுமலைப்பேட்டை தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.

இந்த நிலை நீடித்தால் அமராவதி ஆற்றில் உள்ள உயிரினங்கள் மற்றும் ஆற்றை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படும் . எனவே அமராவதி ஆற்றில் கழிவு நீர்கள் கலப்பதை தடுத்து ஆற்றை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த  மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. தொடர்ந்து இந்த வழங்கின் விசாரணை இன்று(ஜூன்.19)  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள்,  “அமராவதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இது குறித்து வருவாய்த்துறை செயலர் , கரூர் மாவட்ட ஆட்சியர் , கரூர் மாவட்ட காவல் எஸ்பி போலிட்டோ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.