அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு பயணம் – கணவரை கூலி படை ஏவி தீர்த்துக் கட்டிய மனைவி!

தேனிலவு சென்றபோது கணவரை கூலி படை ஏவி மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி என்பவர் கடந்த மாதம் சோனம் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து இவரும் இணைந்து மேகாலயா பகுதிக்கு தேனிலவு சென்றுள்ளனர். அதன் பின்னர் இருவரும் கடந்த மே 23 ஆம் தேதி காணவில்லை என்று போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதன் விளைவாக ராஜா ரகுவன்ஷியின் உடல் கடந்த ஜூன் 2 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த தேடுதலில் ஒரு கத்தியும் கண்டுபிடிக்கப்பட்டது, இதன் காரணமாக கொலை என்று யூகிக்க தொடங்கிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் உயிரிழந்தவரின் மனைவி சோனம் இன்று(ஜுன்.09) பெற்றோரிடம் தனது இருப்பிடம் குறித்து கூறியுள்ளார். இந்த தகவலை சோனமின் பெற்றோர் போலீசாருக்கு தெரிவிக்க, காஜிபூர் அருகே உள்ள தாபாவில் சோனமை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து சோனமிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி சோனம், விருப்பமின்றி ராஜா ரகுவன்ஷியை திருமணம் செய்துகொண்டு, தனது அப்பாவின் கடையில் வேலை செய்யும் ராஜ் குஷாலா என்பவருடன் நீண்ட காலம் பழகி வந்துள்ளார். இதையடுத்து  சோனம் தனது கணவரை தனியாக அழைத்து சென்று ராஜ் குஷாலா உதவியுடன் சிலரை சேர்த்துக்கொண்டு கணவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக ராஜ் குஷாலா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி படை ஏவி கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.