சுவீடன் நாட்டில் திருக்குர்ஆன் அவமதிக்கப்படுவதற்கு அதிகாரிகள் அனுமதித்ததை கண்டித்து அந்நாட்டு தூதரை நாட்டை விட்டு ஈராக் வெளியேற்றியது.
சுவீடன் நாட்டில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் சுவீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் திருக்குர்ஆன் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மையில், ஈரானிலிருந்து சுவீடனில் தஞ்சம் புகுந்த ஒருவா் ஆா்ப்பாட்டத்தின் போது திருக்குர்ஆனை எரித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள துருக்கி தூதரகத்துக்கு அருகே நடைபெற்ற இதுபோன்ற ஆா்ப்பாட்டம் காரணமாக சுவீடனுக்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, உக்ரைன் போருக்குப் பிறகு அதுவரை அணி சேரா நிலையைக் கடைப்பிடித்து வந்த சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய முயன்றாலும், அதற்கு துருக்கி தடைக்கல்லாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், ஈராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் நேற்று ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடங்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனா். அரசின் அனுமதியுடன் ஈராக் தூதரகம் எதிரே நடைபெறவிருக்கும் அந்த ஆா்ப்பாட்டத்தின் போது திருக்குரானை கொளுத்தப்போவதாகவும் அவா்கள் கூறியிருந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகா் பாக்தாதிலுள்ள சுவீடன் தூதரகம் முன்னா் நேற்று அதிகாலை குவிந்த நூற்றுக்கணக்கானவா்கள் அந்தத் தூதரகத்தை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்தும் கொளுத்தினா். இதற்கிடையே, திட்டமிட்டபடி சுவீடனிலுள்ள ஈராக் தூதரகம் எதிரே அந்த நாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் நேற்று ஆா்ப்பாட்டம் நடத்திய மோமிகா, திருக்குர்ஆன் தரையில் போட்டு மிதித்தாா். மேலும், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் படம் மற்றும் அந்நாட்டு கொடி ஆகியவற்றை அவா் காலால் மிதித்து அவமதித்தாா்.
ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இதனை தடுக்கவில்லை. இந்த நிலையில், ஈராக் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“சுவீடன் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் அதற்கு பொறுப்பாவார்கள். எனினும், ஸ்டாக்ஹோமில் திருக்குர்ஆன் அவமதிக்கும் ஆா்ப்பாட்டத்துக்கு சுவீடன் அரசு அனுமதி அளித்துள்ளதைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டுக்கான தூதா் நாட்டை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சுவீடனிலுள்ள ஈராக் தூதரும் உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளாா். திருக்குர்ஆன் அவமதிப்பதை அனுமதிக்கும் நிலைப்பாட்டை சுவீடன் தொடா்ந்து பின்பற்றினால், அந்த நாட்டுடனான தூதரக உறவு முழுமையாகத் துண்டிக்கப்படும்” இவ்வாறு ஈராக் பிரதமா் அறிக்கை வெளியிட்டுள்ளார்.