உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது.
15-வது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்படி ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இந்திய அணி, ‘சி’ பிரிவில் 3-வது இடத்தை பெற்ற நியூசிலாந்துடன் 2-வது சுற்றில் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்றிரவு மோதியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-3 நியூசிலாந்து ,என சமநிலையில் இருந்தன.
இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப் பட்டது. இதில் இரு அணிகளுக்கு தலா 5 வாய்ப்புகள் அளிக்கப்பட்டது. இதில் 5-4 என நியூசிலாந்து அணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி 9-வது முதல் 12-வது இடத்திற்கான ஆட்டத்தில் விளையாடும்.