பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவ கல்லூரியில், இந்திய வரலாற்று பேரவையின் 81ஆவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைகள் மீறப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார். மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், வரலாற்று உணர்வுகளை ஊட்டுவது இன்றைய காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது எனக்கூறிய முதலமைச்சர், பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்றார். கீழடியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளதாக கூறிய அவர், உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே அரசின் கடமை என கூறினார்.







