இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம் பாட முடியுமா என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.
சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் இன்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, “இந்தி திணிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்திக்கு தாய்ப்பால் மற்ற மொழிகளுக்கு கள்ளிப் பால் என்ற நிலையில் தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட இயக்கம் என்பது ஆன்மீகத் தமிழை பாதுகாக்கும் இயக்கம். இந்தி வந்தால் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடமுடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.தமிழ் மொழியை விட இலக்கிய வளம் கொண்டது இந்தி மொழி அல்ல என்று குறிப்பிட்ட அவர், “இந்தி மொழி என்பது தமிழுக்கு மூத்த மொழி அல்ல. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது தமிழ். இந்தி அப்படி அல்ல, 500 ஆண்டு காலம் மட்டுமே இந்தி மொழிக்கு வரலாறு உள்ளது. பாரசீகம் மற்றும் அரபு மொழி சேர்ந்து உருது உருவாகிறது. இதெல்லாம் சேர்ந்து இந்தி மொழி உருவானது. கீழடி ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. நமது வரலாற்றை அங்கு கிடைக்கும் பொருட்கள் சொல்கின்றன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்திற்கு வரும் ஒன்றிய அமைச்சர்கள் திருக்குறள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள். ஆனால் ஏன் தமிழை ஆட்சி மொழியாக்க மறுக்கிறார்கள்?. ஆங்கிலம் எங்களுக்கு இணைப்பு மொழி. அதனால் தான் உலகம் முழுவதும் எந்த நாட்டிற்கு சென்றாலும் படித்து வேலை பார்த்து பொருளாதார வளம் பெற்று வருகிறார்கள். இது இந்தியால் சாத்தியமாகாது. குஜராத் மாநிலத்தில் குஜராத்தி மொழி இரண்டாம் இடத்தில் தான் உள்ளது. இந்திதான் உங்கள் மாநிலத்தின் முதல் மொழி. நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் மோடி, அமித்ஷா. அந்த நிலை வர நாங்கள் விடமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.