இமாசலப் பிரேதசத்தில் தனியார் பள்ளிப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷெர் சாலையில் ஜங்லா பகுதியில் பள்ளிப் பேருந்து மாணவ-மாணவிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டு விழுந்தது. இந்தப் பேருந்து குலூவிலிருந்து சைஞ்ச் நோக்கி காலை 8 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. தகவலறிந்து மீட்புப் படையினர் விபந்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்த காரணம் உடனடியாக தெரியவில்லை. காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முதலமைச்சர் இரங்கல்
இதனிடையே, பள்ளி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் இரங்கல் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
ஜே.பி.நட்டா கவலை
இந்த விபத்துக்கு தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
பிரதமர் மோடி நிதியுதவி
இந்நிலையில், பள்ளிப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இமாச்சல் பிரதேசத அதிகாரிகளுடன் விபத்து குறித்து கேட்டறிந்ததாகவும் மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.








