சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை புரிந்துள்ள மிதாலிராஜ் கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மகளிருக்கான ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான 39 வயதான மிதாலிராஜ் 23 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
அவர் ஓய்வு பெற்றதும் அவரைப் பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தை மிதாலி ராஜ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுக்கு மேலாக மிகச்சிறந்த பங்களிப்பு அளித்த நீங்கள், தேசத்தை பெருமை கொள்ள செய்தீர்கள். உங்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து நானும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டு வாழ்க்கையில் நிறைய சாதனைகளை படைத்து இருக்கிறீர்கள். உங்களது கேப்டன்ஷிப் திறமை சிறப்பானதாக அமைந்தது. 2017-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியை நெருங்கி வந்ததை மறந்து விட முடியாது. நெருக்கடியான அந்த தருணத்தை நீங்கள் அமைதியாகவும், பொறுமையாகவும் கையாண்ட விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அடுத்து நீங்கள் எதை செய்தாலும் அது சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் இந்திய விளையாட்டுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
“Sports power is becoming the power of India and the identity in sports is becoming the identity of the nation,” #NewIndia 👍 https://t.co/msy5Ruq5BT
— Col Rajyavardhan Rathore (@Ra_THORe) July 2, 2022
இது குறித்து மிதாலி கூறுகையில், ‘பிரதமர் என்னை ஊக்கப்படுத்தி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி இருப்பது பெருமையாக உள்ளது. இந்தக் கடிதத்தை வாழ்நாள் பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன்’ என்றார்.
பிரதமர் மோடி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவ்வப்போது ஊக்குவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








