இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மாவீரன் திரைப்படத்தை திரையிட நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் P.ஜெயசீலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவீரன் திரைப்படத்திற்கு எதிரான மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில், சாந்தி டாக்கிஸ் தயாரித்துள்ள மாவீரன் ஜூலை 14ல் வெளியாக உள்ளது. டிரைலரில் மிஷ்கின் வரக்கூடிய காட்சிகளில் காட்டப்படும் கொடி, வேஷ்டி, துண்டு ஆகியவை இந்திய ஜனநாயக கட்சியை குறிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில் அக்கட்சி சார்பில் V. வெங்கடேசன் என்கிற வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது வாதிட்ட அவர் ,சிகப்பு – வெள்ளை – சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியை எதிர்மறையான கதாப்பத்திரத்தில் பயன்படுத்தப்படுவதால், இந்திய ஜனநாயக கட்சி குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைக்கும் என வாதத்தை முன்வைத்தார்.
அதோடு படத்தில் பயன்படுத்தப்படும் கொடியின் நிறத்தை மாற்றம் செய்யாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மாவீரன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் P S ராமன், படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடி போன்றது இல்லை. இளம் காக்கி – மஞ்சள் – இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது என வாதிட்டார்.
படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை என படத்தின் தொடக்கத்தில் டிஸ்கிளைமர் வெளியிடப்படும். காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் எனவும் வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ஜூலை 14 ம் தேதி மாவீரன் திரைபடத்தை திரையிட தடையில்லை என உத்தரவிட்டார். இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டும்.
அதோடு, மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.







