ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கவலை தெரிவித்துள்ளார்.
கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்களான இருவரும் நிதி நிறுவனம், கிரிஷ் பால்பண்ணை உள்ளிட்ட தொழில்களைச் செய்துவந்தனர். பாஜக பிரமுகர்களான இவர்கள் சொந்த ஹெலிகாப்டரிலேயே வலம்வந்ததால், கும்பகோணம் பகுதி மக்களால் `ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’ என அழைக்கப்பட்டனர்.
இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி கோடி கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக குறிப்பிடப்படும் சோலை செல்வம் என்பவர் ஜாமீன் கோரி மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அதில், “பல்வேறு குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் கணேசனின் மனைவி அகிலாண்டத்தின் மீது உள்ள நிலையில், ஜாமீனில் சென்றால் அவர்களிடம் உள்ள சொத்துக்களை எவ்வாறு பறிமுதல் செய்ய முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு திருப்பி செலுத்துவது? இதனையெல்லாம் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?” என அடுக்கடுக்கான கேள்விகளையெழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி முறையான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். இதனையடுத்து சோலை செல்வத்திற்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.








