பெகாசஸ் விவகாரம் குறித்த சிறப்பு விசாரணை நடத்த 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பெகாசஸ் தொழில்நுட்பம் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டுகேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, சுதந்திரமான சிறப்பு விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை எனவும், தொழில்நுட்பங்கள் தேவை என்றபோதும், தனி மனித பிரைவசி காக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு, தெளிவான நிலைப்பாட்டில் இல்லாததால், இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பது கவலையளிப்பதாகவும், பெகாசஸ் விவகாரம் தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும், மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மத்திய அரசு அமைத்த குழு நிராகரிக்கப்படுவதாகவும், உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்தரன் தலைமையில் இந்த நிபுணர் குழு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், “ரா” உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி, சந்தீர்ப் ஓப்ராய் ஆகியோர் இடம் பெறுவர் எனவும், மூவர் குழுவுக்கு உதவும் வகையில் ஒரு தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த குழுவில், நவீன்குமார் சவுத்ரி, பிரபாகரன், மற்றும் மும்பை ஐஐடி பேராசிரியர் அஸ்வினி அனில் குமஸ்தே இடம் பெறுவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.







