மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து நிலைமையை உண்ணிப்பாக கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்ட்ராவில் ஏற்கனவே பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குண்டலிகா ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்பா, சாவித்திரி, படல்கங்கா, உல்ஹாஸ், கார்ஹி ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் அபாய கட்டத்திற்கு நெருக்கமாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மகாராஷ்ட்ராவில் பரவலாக மழை இருக்கும் என்றும் பல பகுதிகளில் கனமழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தலைநகர் மும்பையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ரத்னகிரி, ரைகாட் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படவும் போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜெயந்த் சர்கார் தெரிவித்துள்ளார்.
கடந்த 12 மணி நேரத்தில் மும்பையில் 95.81 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால், சாலைகளில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.
கன மழை எச்சரிக்கையை அடுத்து, தலைமைச் செயலாளர் மனுகுமார் ஸ்ரீவத்சவாவுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிலைமையை உண்ணிப்பாக கவனித்து பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு துரித நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் தயார் நிலையையும் உறுதிப்படுத்திக்கொள்ளுாமறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.