தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வங்கக்கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொள்ள உள்ளது. மேலும் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மேற்கு, வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதி நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக்கூடும்.
இதன் காரணமாக நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். இந்த இரண்டு நாட்களும், தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.







