துபாயில் இன்று மீண்டும் கனமழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கடந்த மாதம் பெய்த மழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. 1949-ம் ஆண்டு முதல் இதுவரை இவ்வளவு மழை பெய்யவில்லை என துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழையால் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், துபாயில் இன்று மீண்டும் கனமழை பெய்தது. இதனால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விமான நேர மாற்றம் குறித்து பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனத்தை அணுகி தெரிந்துகொள்ளுமாறும் விமான நிலையத்தை அணுக கூடுதல் நேரம் அளிப்பதாகவும் மெட்ரோவை பயன்படுத்துமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கனமழையால் பள்ளிகள் அலுவலகங்கள் மூடப்பட்டன.








