சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் அதிக மழை பதிவாகி உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் கனமழை காரணமாக இடிந்து விழுந்த கிணற்றின் பக்கவாட்டு சுவர்
தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது சாலைகளில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக முடிச்சூர் கங்கா நகர் 2வது பிரதான சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பு தனியார் கிணற்றின் உரிமையாளர் அல்லது முடிச்சூர் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஶ்ரீகாந்த்துடன் நியூஸ்7 செய்தியாளர் ரேவதி நேர்காணல் நடத்தினார். அவர் தெரிவித்ததாவது..
“நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. ஜூன் மாதத்தில் பொதுவாக புயல் இருக்காது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான் இருக்கும். தென் மேற்கு பருவ மழையில் ஏற்பட்ட தொய்வு காரணமாகவே வட மாநிலங்களில் வெப்ப அலை ஏற்பட்டது. சென்னையில் ஜூன் மாதத்தில் சராசரியாக 5 முதல் 7 சென்டி மீட்டர் தான் மழை பெய்யும், இந்த ஆண்டு சாதாரண அளவை விட 3 முதல் 4 மடங்கு அதிக மழை பெய்துள்ளது.
சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின்பு ஜூன் மாதத்தில் 3 மடங்கு அதிக மழை பதிவாகி உள்ளது. நாளை முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்ப சலனம் காரணமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.