விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான மத்திய அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது
தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை திருப்பி செலுத்த 2 வருட கால அவகாசம் வழங்கக் கோரி திருச்சியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு ஆகியவை மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேநேரம், தமிழ்நாடு முதலமைச்சர், தேசிய வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதனடிப்படையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.







