சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு-அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சம்மனை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி,  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 -15 காலகட்டத்தில்…

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி,  மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 -15 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்குகள் எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்
சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு
அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த
போது, மாநில போலீசார் தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ள நிலையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமலாக்கப்பிரிவு கோரிய ஆவணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு
எதிராக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.