தனது எம்.பி சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் பிப்ரவரி மாதம் 14ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. தேர்தலில் பஞ்சாப்பை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக அக்கட்சியின் மூத்த தலைவர் பகவந்த் மான் கடந்த மாதம் 16ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கிடையே பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹர்பஜன் சிங். இந்நிலையில் தனது எம்.பி சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கும் வழங்குவதாக கூறியுள்ளார் ஹர்பஜன்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ மாநிலங்களவை உறுப்பினராக எனது சம்பளத்தை விவசாயிகளின் மகள்களின் கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கு வழங்க விரும்புகிறேன். அதோடு நமது நாட்டின் முன்னேற்றத்துக்கும் பங்களிக்க விரும்புகிறேன். இதற்காக என்னால் முடிந்த வரை அனைத்தையும் செய்வேன். ஜெய்ஹிந்த்” என கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்பின்னர்களில் ஒருவரான ஹர்பஜன், சிங்கிற்கு 41 வயதாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பரசுராமன், மாணவ ஊடகவியலாளர்






