தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், சென்னையிலிருந்து பயணத்தைத் தொடங்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் எனக்கோரி மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா தொற்று கடந்த காலங்களில் வேகமாக பரவிய நிலையில், ஹஜ் புனிதப் பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தமிழ்நாடு பயணிகள் கேரளாவில் இருந்து பயண பட வேண்டி இருந்தது. இதனால், அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டது. இந்நிலையில், ஹஜ் பயணத்தை சென்னையிலிருந்து தொடங்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஹஜ் புனிதப் பயணம் சென்னை விமான நிலையத்தில் இருந்த தொடங்க அனுமதிக்க கோரி பிரதமருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கடிதம் எழுதியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்களுக்காக, சென்னையில் இருந்து 1987ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டு வந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஹஜ் புனிதப் பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21-லிருந்து 10-ஆகக் குறைக்கப்பட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் கேரள மாநிலம், கொச்சியிலிருந்து பயணத்தைத் தொடங்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதனால், 700 கிலோ மீட்டருக்கு மேல் கூடுதலாகப் பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, ஹஜ் பயணிகள் பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னையிலிருந்து ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.








