ஊக்க மருந்து சோதனை: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவைச் சேர்ந்தவர் தீபா கர்மாகர் (29). 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, 2015…

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திரிபுராவைச் சேர்ந்தவர் தீபா கர்மாகர் (29). 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு, 2015 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கமும் வென்றார். 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்தார்.ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை ஆவார்.

இந்நிலையில், தீபா கர்மாகர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம் அவருக்கு 21 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்துள்ளது. சர்வதேச ஊக்க மருந்து சோதனை முகமை கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி போட்டி இல்லாத சமயத்தில் தீபா கர்மாகரிடம் ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரிகளைச் சேகரித்தது. அந்த சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஹிஜெனாமின் என்னும் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதிரி சேகரித்த நாளில் இருந்து தீபா கர்மாகரின் தடை காலம் அமலுக்குள்ளாகி உள்ளது. மேலும், அவரது போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது தடை காலம் வரும் ஜூலை 10ஆம் தேதியுடன் முடிகிறது.

தடை விதித்துள்ளதை உறுதி செய்துள்ள தீபா கர்மாகர் தனது ட்விட்டர் பதிவில், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எனது உடலுக்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இந்த பிரச்சினையில் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்திடம் இருந்து தீர்வு காணுவதற்காக இடைநீக்கத்துக்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டேன். இந்தப் பிரச்சினை மன ரீதியாக மிகவும் கடினமான போராட்டமாக அமைந்தது. எனது விளையாட்டு வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொள்ளும் எண்ணம் எனக்கு ஒருபோதும் மனதில் தோன்றியதில்லை. என்னுடைய நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன்.

2017, 2019ஆம் ஆண்டுகளில் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து போட்டிகளில் பங்கேற்ற பிறகு நான் அடுத்தடுத்த பின்னடைவுகளை சந்தித்தேன். நான் வலுவாக மீண்டும் களம் திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். நான் எங்கு இருக்கிறேன் என்ற தகவலை ஊக்க மருத்து தடுப்பு முகமைக்கு முறையாக தெரிவிக்காததால் 2 ஆண்டு தடை விதிப்புக்குள்ளாகி உள்ளேன் என்ற செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தீபா கர்மாகரின் பயிற்சியாளர் பிஷ்வேஷ்வர் நந்தி கூறுகையில், செயல் திறனை அதிகரிக்கும் ஊக்க மருந்தை கர்மாகர் பயன்படுத்தி இருந்தால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கும். ஊக்க மருந்து அவரது உடலுக்குள் எப்படி வந்தது என்பது கர்மாகருக்கு தெரியவில்லை. இதனை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையும் புரிந்து கொண்டுள்ளது. இது எப்படி நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வாடாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அவர்கள் கர்மாகர் பயன்படுத்திய மருந்துகளை ஜெர்மனி சோதனை மையத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், எதுவும் தெரியவில்லை என்றார்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.