ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட போதிலும், விபிஎன் முறையில் ரகசியமாக விளையாடப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பப்ஜிக்கு மாற்றாக “ஃப்ரீ பயர்” எனும் விளையாட்டு இணையத்தில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளை எவ்விதம் சிறப்பாக விளையாடுவது என்பது குறித்து, மதன் என்பவர் யூடியூப் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர் தனது முகத்தை காட்டாமல் குரலை மட்டும் பதிவிட்டு காணொளிகளைப் பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதில் ஆபாச வார்த்தைகளைப் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. விளையாட்டில் தன்னுடன் ’சாட்’ செய்யும் பள்ளி சிறுமிகளின் வலைப்பக்கங்களுக்குச் சென்று பாலியல் ரீதியாக பேசி அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசாருக்கு புகார் வந்ததை அடுத்து, மதனை தேடி வந்தனர். தலைமறைவான அவரை, தருமபுரியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீன் கோரி, மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி மதனின் ஜாமீன் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து தற்போது மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.