குஜராத் மாநிலம் நவசாரி, ஜுனாகத் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
குஜராத் மாநிலத்தின் தெற்கு மற்றும் செளராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் நேற்று திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அணைகளில் நீா் மட்டம் உயா்ந்து வரும் நிலையில், நதிகளிலும் நீா்மட்டம் அபாயகர அளவைத் தாண்டியுள்ளது. நவசாரி, ஜுனாகத் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்துவரும் கனமழையினால் பெரும்பாலான பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளன. குறிப்பாக கால்நடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அதேபோல் நவசாரி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் 2 மணி நேரத்தில் 23 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் நுழைந்ததால், பொதுமக்கள் உட்கார இடமின்றி கடுமையாக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நவசாரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், தந்தையும், மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மட்டும் மீட்கப்பட்டாா். மகனைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தெற்கு குஜராத், செளராஷ்டிரம்-கட்ச் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை முதல் மிகத் தீவிர கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. குஜராத்துக்கு அருகில் உள்ள தாத்ரா-நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. சில்வாசா நகரத்தில் உள்ள பாலத்தை வெள்ளிக்கிழமை இரவு கடக்க முயன்ற காா் ஒன்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த தந்தையும் மகனும் உயிரிழந்த நிலையில், அவா்களது உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல் ஹிமாசல பிரதேச மாநிலத்திலும் மேகவெடிப்பைத் தொடா்ந்து அங்கு மிக பலத்த மழை பெய்து வருகிறது. மாநில தலைநகா் சிம்லாவில் உள்ள கலாலா கிராமத்தில் பணிபுரிந்து வரும் நேபாள தம்பதி, சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த மாவட்டத்தின் பாடியாரா கிராமத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் 3 போ் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா