பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகைக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவது, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளுதல் உள்பட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதற்கான அரசாணை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பணிபுரியும் மகளிர் / உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் நகரப்பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதனால் , நகரப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்குவதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ .1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில், அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.







