ஆளுநரை திரும்பப் பெற குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் வைகோ கையெழுத்திட்டார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் கையெழுத்திட திமுக மற்றும் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று திமுக எம்.பி.க்கள் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் வந்து படிவத்தில் கையொப்பமிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, “தமிழக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டமன்றத்தின் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராகப் பேசி இந்தியா மதம் சார்ந்த நாடுதான் என்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டியவர்- அதன்படி நடக்க வேண்டியவர் சனாதன தர்மம் பேசுகிறார் என்றும், மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறார் எனவும் விமர்சித்த அவர், “திருக்குறளை விமர்சிக்கிறார். திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார். நடுநிலைமை தவறி, அரசியல் சார்ந்த- அதுவும் பாஜகவின் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவிப் பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார்” என்று குறிப்பிட்டார்.