அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கோவை அவினாசி சாலையில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதால் அவற்றை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலத்தை, சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது எனவும் குறிப்பிட்டனர். மேலும், எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.







