மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் கூகுள் நிலைமை மோசமாக இருப்பதால் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற்போது பொருளாதார சூழல் சரியில்லாத நிலையில் செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உதாரணமாகப் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், பாதி ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்பபெட் நிர்வாகம் சுமார் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க நாட்டில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய நாளிலிருந்து பெருநிறுவனங்கள் பல இடர்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதைச் சமாளிக்கவே ட்விட்டர், அமேசான், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா, போன்ற டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாகக் கடந்த 3 மாதத்தில் பெரும்பாலான டெக் நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்தது வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது.மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் தற்போது நிலைமை மோசமாக இருப்பதால் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.







