துபாயில் இருந்த டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.27 கோடி மதிப்பிலான வைர வாட்சை விமான நிலையத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் விலை உயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு பயணியிடமிருந்து விலை உயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில், ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டன.
அதில், ஜேக்கப் அண்ட் கோ என்ற வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த ஒற்றை வாட்சின் மதிப்பு 27 கோடியே 9 லட்ச ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வாட்ச்களுடன் சேர்த்து தங்கம், வைரம் பதிக்கப்பட்ட கைசெயின் மற்றும் ஐபோன் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து துபாயில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபரும் அவரது உறவினரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல கிளைகள் அமைத்து வாட்ச் கடை நடத்தி வருவது தெரியவந்தது.
கைப்பற்றப்பட்ட 7 வாட்ச்களையும் குஜராத்தை சேர்ந்த பிரபலமான நபருக்கு விற்பனை செய்ய கொண்டு வந்ததாகவும், டெல்லியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் வைத்து வாட்ச்களை அந்த நபரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பிரபலமான நபர் யார்? அவரது பெயர் என்ன? என்று கைதான நபர் இதுவரை கூறவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







