கரூரில் கனமழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்குமாறு ட்விட்டரில் கோரிக்கை வைத்த மாணவருக்கு, பள்ளிக்கு புறப்படுங்க தம்பி என , மாவட்ட ஆட்சியர் அளித்த பதில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மழை பெய்தாலே தினமும் காலை மாணவர்கள் செய்தி சேனலில் தமது மாவட்டத்திற்கு விடுமுறையா என பார்ப்பதற்கு அமர்ந்துவிடுகிறார். அதேபோல ஆட்சியருக்கே ட்விட்டரில் டேக் செய்து விடுமுறையா என மாணவர்கள் கேட்பதும் நடந்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம், மண்மங்களம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையினால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியரிடம், “கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆகையால் இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா” என ட்விட்டரில் மாணவர் ஒருவர் கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து அந்த மாணவருக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மழை குறைந்துவிட்டது என்றும், பள்ளிக்கு கிளம்பி போங்க தம்பி, நண்பர்களையும் கிளம்ப சொல்லுங்க தம்பி என பதில் அளித்திருந்தார். மேலும் நிறைய படிக்க வேண்டியிருக்கு எனவும் கூறியிருந்தார். தற்போது, இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக வருகிறது.