“மாணவ , மாணவிகளின் உயிரிழப்பு எண்ணங்களைப் போக்க மனநல ஆலோசனைகள் மற்றும் ஒழுக்க நடவடிக்கைகளுக்கான வகுப்புகளை பள்ளி, கல்லூரிகளில் கட்டாய பாடமாக அரசு ஏற்படுத்த வேண்டும்” என்று அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தனியார் பள்ளியில் ஜூலை 13ஆம் தேதி காலை அப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மாணவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடுத்தடுத்து உயிரை மாய்த்துக் கொண்டனர். இது அனைத்துத் தரப்பினரிடையும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவ , மாணவிகளின் உயிரிழப்பு எண்ணங்களைப் போக்க மனநல ஆலோசனைகள் மற்றும் ஒழுக்க நடவடிக்கைகளுக்கான வகுப்புகளை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள்உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் , கல்வியாளர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் , அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்காக மாணவ , மாணவிகள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் மிகுந்த வருத்தமடையச் செய்கிறது .
மாணவர்கள் இந்திய நாட்டின் வருங்கால தூண்கள் என்று கூறிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இன்றைய மாணவர்கள் பிரச்னைகளை எதிர்க்கொள்ளும் மனநிலையில் இல்லை . அதற்கு காரணம் பெற்றோர்களா ?, ஆசிரியர்களா ? இல்லை சமுதாயமா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது . சென்ற ஜுலை மாதத்தில் நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி, மேலப்பாளையம் அருகேயுள்ள முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மாணவன் மொபைல் போனை பயன்படுத்த கூடாது என்பதற்காக ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் செய்துள்ளார்.
மேலும், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த முத்துகுமார் அவர்களின் மகள் பாப்பா என்ற கல்லூரி மாணவி கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டையில் சுடர்ராஜ் மகன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அய்யம்பட்டி கிராமம், கண்ணன் என்பவரின் மகள் யோகலட்சுமி என்ற 11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு உயிரிழப்பு செய்துள்ளார். தற்பொழுது திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் 5ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்திரி என்ற மருத்துவ மாணவி விடுதியில் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு உயிரிழப்பு செய்துள்ளார் என்று பத்திரிக்கை செய்திகள் வருகின்றன.
பிரச்சனைகளுக்கு உயிரிழப்பு என்றுமே தீர்வாகாது. இதை மாணவ, மாணவிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாணவ, மாணவிகளின் தெளிவில்லாத சிந்தனையாலும், பயத்தினாலும், மன அழுத்தத்தினாலும் இந்த விபரீத முடிவை எடுக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் தீர்வு மாணவ, மாணவிகளுக்க முறையான மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும். மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அதோடு பொது மக்களும் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மனநல ஆலோசனைகளுக்கான, ஒழுக்க நடவடிக்கைகளுக்கான வகுப்புகளை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தை வசந்தகாலமாக மாற்ற தமிழக அரசு உரிய முயற்சிகளையும், ஏற்பாடுகளையும் விரைந்து எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா